அகண்ட பாரத மாதாவுக்கு
ஆபரண அலங்காரம்.
பாரத மாதாவுக்கு
பாலியல் பலாத்காரம்.
ஆர்எஸ்எஸ் தடிகள்
ஆணுறுப்புகளாய்
அவதாரம் எடுத்து
பாரத மாதாவை படுக்கையில் தள்ளுகின்றன.
மணிப்பூரின் அம்மண ஊர்வலத்தை
கோகுலத்தின் கோபிகை ஊர்வலம் போல
குஷியாக குஷாலாக
கொண்டாடினார்கள் போலும்!
கோபிகைகளின் சேலை
அபகரித்த கோகுலக் கண்ணன்
காட்டிய வழிப்படி பழங்குடி மகள்களின்
பாவாடை சேலை அபகரித்தனரோ
பரந்தாமனின் பக்த சிகாமணிகள்?
வாய் திறந்து நெடுநாள்
பேசாத விஸ்வ குருவின்
வாயில் விநாயகர்
கொழுக்கட்டை இருந்ததா?
கோமாதா எருமுட்டை இருந்ததா?
தேசியக் கொடியின்
சிவப்பை இனி வல்லுறவு ரத்தத் துணி
கொண்டே வடிவமைப்பதாய் சபதமேற்றார்களோ?
தாயின் மணிக்கொடிக்கு
இப்படி தாங்களும் கூடுதல் மரியாதை தருவதாய்
ஆர்எஸ்எஸ் தேஷ்பக்தி அறிவிக்கப்படுமோ?
பூர்வ குடிகளின் பிணம் புதைகிற
புதைமேடாய் மலையை மாற்றி
அதன் மேல் தாங்களும்
சிலுவை நடுவதாய்
சாதிப்பார்களோ “சமயசமரச” சங்கிகள்?
பசியை மரங்களை
விட மலையில் இதுபோல் சவமேடுகளின்
சிலுவை மரங்களே
சிறப்பு என “வனவாசி”களுக்கு
மரணப் பரிசை மகிழ்ந்து தந்தார்களோ?
தேசத்தின் முதல் மகள் மலைமகள்
கோயில் கருவறைக்கு வெளியே...!
தேசத்தின் எளிய மலைமகள்கள்
மலைகளை விட்டு வெளியே....!
காட்டின் மகள்கள்
வெளியேறட்டும்!
கார்ப்பரேட்டுகள் மலைக்கு வரட்டும்!
இப்படி ஏதோ ஒரு விதத்தில்
முடி முதல் அடி வரை - முதல் மகள் முதல் கடை மகள் வரை -
சரிசமமாக “சமத்துவ” சங்கிகள்
சட்டம் செய்யப் போகிறார்கள்!
உரக்கச் சொல்கிறார் லோககுரு:
“நாட்டுக்கு அவமானம்”
உள்ளுக்குள் சொல்கிறார் விஸ்வகுரு:
“நமக்கு மட்டும் வெகுமானம்!”
இல்லையா பின்னே!
மலையின் இரு யானைகளுக்கு
மதம் பிடித்தால் மட்டும் போதுமா?
மலையின் இரு மக்கள் குழுவும்
மதம் பிடித்து முட்டிக் கொள்ளட்டுமே!
ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு தலை விழட்டுமே!
ஓட்டு எந்திரத்தின் “பீப்” சத்தத்தில்
அபலைகளின் அலறல் சத்தம் அமுங்கிப் போகட்டுமே!
நீரில் மட்டுமல்ல நண்பர்களே!
நிலத்திலும் முதலையின் கண்ணீரை
காணலாம் என்பது கட்டுக்கதை அல்ல!
மக்களவை அருகே அண்மையில்
மாலை மாலையாய் வடித்த மன்கி
பாத் மகான் கண்ணீரே அதற்கு சாட்சி!